படம் வெற்றி பெற வேண்டி திருப்பதி கோயிலுக்கு வந்த ஷாரூக்

திருப்பதி: திருப்பதியில் சாமி தரிசனம்... திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜவான் படம் வெளியாக உள்ளதையொட்டி நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.

குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்ற ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டனர். நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் நாளை 7-ந்தேதி வெளியாகிறது.

இந்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கியுள்ளார். படத்தில் நயன்தாரா, தீபிகா படுகோனே, விஜய் சேதுபதி, யோகி பாபு, பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டாரும், ஷாருக்கானும் ஒன்றாக நடித்திருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஷாருக்கான், நயன்தாரா, விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் திருப்பதிக்கு சென்றனர்.

வேட்டி, சட்டை, அங்க வஸ்திரம் அணிந்து தமிழக பாரம்பரிய முறையில் ஏழுமலையானை ஷாருக்கான் வழிபட்டார். சாமி தரிசனத்திற்கு பின் கோவிலை விட்டு வெளியே வந்த அவர்களை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதே போன்று, நயன்தாராவையும் ரசிகர்கள் வட்டமடித்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.