தனுஷின் 50வது படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்... ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: தனுஷின் 50வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதை ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றுள்ளனர்.
தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில், தற்போது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இந்தப் படம் தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தன் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கவுள்ளார். சில நாள்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக துஷரா விஜயனும், சகோதரர்களாக எஸ்.ஜே.சூர்யா, சுதிப் கிஷன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
மேலும், வடசென்னையை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக நடிகர் தனுஷ் புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.