ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு

சென்னை: படப்பிடிப்பு நிறைவு... கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஸ்டோன் பெஞ்ச் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

‘ஜிகர்தண்டா’ படம் வெற்றிப்பெற்றதையடுத்து அப்படத்தின் இரண்டாவது பாகமான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வந்தார். பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், சென்னையில் கடந்த புதன்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்சின் கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில் மற்றும் இன்வீனியோ ஆரிஜனின் அலங்கார் பாண்டியன் இணை தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் முதன்மை வேடங்களில் நடித்துவந்த ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்றனர்.

இதுகுறித்து தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் கூறுகையில், படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த பிரமாண்டமான திரைப்படம் அதிகப் பொருட்செலவில் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படத்தை திரைக்கு கொண்டு வர நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூறுகையில், “எங்கள் அனைவருக்கும் மிகவும் திருப்தியளிக்கும் அனுபவமாக 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படப்பிடிப்பு அமைந்திருந்தது. மிகவும் அழகான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. இப்படம் சிறப்பாக உருவாகியுள்ள நிலையில், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு தற்போது நாங்கள் தயாராக உள்ளோம். பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' வழங்கும் என்று நான் நம்புகிறேன் என்றார்.