புதிய படத்தில் சிம்பு மற்றும் பார்த்திபன் இணைய இருப்பதாக தகவல்!

பிரபல மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்புவும், பார்த்திபனும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மலையாளத்தில் பிரித்விராஜ், பிஜுமேனன் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் 'அய்யப்பனும் கோஷியும்.' பிரித்விராஜ் முன்னாள் ராணுவ வீரராகவும், பிஜூமேனன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராகவும் நடித்து இருந்தனர். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் செய்ய உள்ளனர்.

தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம், பொல்லாதவன், ஜிகர்தண்டா படங்களை தயாரித்த கதிரேசன் வாங்கி இருக்கிறார். இந்தி ரீமேக் உரிமையை பிரபல இந்தி நடிகர் ஜான் அபிரகாம் பெற்றுள்ளார். இந்த படத்தின் இயக்குனர் சச்சி சமீபத்தில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இந்நிலையில், அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் சிம்புவையும் பார்த்திபனையும் நடிக்க வைக்க ஆலோசனை நடப்பதாக தகவல் கசிந்துள்ளது. பார்த்திபனும் சிம்புவுடன் இணைந்து நடிக்க ஆர்வமாக உள்ளார்.

இதுகுறித்து சமீபத்தில் பார்த்திபன் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், சிம்புவும் நானும் இன்னும் சேர்ந்து நடிக்காதது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்று கூறியிருந்தார். எனவே இருவரும் இந்த படத்தில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.