நடிகர் சிம்பு நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் நகரத்து கதையம்சம் கொண்ட படங்களாகவே இருந்த நிலையில் கடந்த 2004ஆம் ஆண்டு ஹரி இயக்கிய 'கோவில்' என்ற திரைப்படம் முழுக்க முழுக்க கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக இருந்தது.
அதன் பின்னர் சிம்புவின் படங்களில் ஒருசில காட்சிகள் கிராமத்தில் படமாக்கப்பட்டதாக இருந்தாலும் முழுக்க முழுக்க கிராமத்து கதையில் சிம்பு நடிக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் சுசீந்திரன் கூறிய கிராமத்து கதை ஒன்று சிம்புவுக்கு பிடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை அடுத்து இந்த படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டதாகவும் 'மாநாடு' படத்தை அடுத்து இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.
16 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் முழுக்க முழுக்க ஒரு கிராமத்து கதையில் சிம்பு நடிக்க உள்ளது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்கும் என்று கூறப்படுகிறது.