சோனுசூட் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தியதாக தகவல்!

கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை செய்து பிரபலம் அடைந்த வில்லன் நடிகர் சோனுசூட் தான் நடிக்கப்போகும் படத்திற்காக சம்பளம் ரூ.4 கோடி வரை கேட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது.

தமிழில் கள்ளழகர், மஜ்னு, ஒஸ்தி, சந்திரமுகி, தேவி படங்களில் வில்லனாக நடித்துள்ள சோனுசூட் இந்தியிலும் அதிக படங்களில் வந்தார். கொரோனா காலத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து இந்தியா முழுவதும் கவனம் பெற்றார். வெளிநாட்டில் சிக்கிய மாணவர்களையும் விமானத்தில் அழைத்து வந்தார்.

வேலை இழந்தவர்களுக்கு வேலை வாய்ப்பையும் எற்படுத்தி கொடுத்தார். படத்தில் வில்லனாக நடிக்கும் நீங்கள் நிஜத்தில் ஹீரோ என்று சமூக வலைத்தளத்தில் பலரும் அவரை பாராட்டினர்.

இந்த நிலையில் சோனுசூட் சம்பளத்தை இரு மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களில் நடிக்க கால்ஷீட் கேட்டு அவரை அணுகியபோது ரூ.4 கோடி வரை சம்பளம் கேட்டதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. கொரோனாவுக்கு முன்பு ரூ.2 கோடி வாங்கினார் என்று கூறப்படுகிறது.