தெலுங்கு இளம் இயக்குனர் படத்தில் நடிக்க உள்ளரா சூப்பர் ஸ்டார்?

சென்னை: கோலிவுட்டில் பரபரப்பு... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை. இளம் தெலுங்கு இயக்குனர் ஒருவர் இயக்கப்போவதாக வெளிவந்திருக்கும் தகவல், கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது ரசிகர்கள் மத்தியிலும் செம வைரலாகி வருகிறது.

தெலுங்கில் பிம்பிசாரா என்ற திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை மல்லிடி வசிஸ்தா என்ற இளம் இயக்குனர் இயக்கியிருந்தார். இதுதான் அவருக்கு முதல் படம்.

ஆனால் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு, படத்தின் மேக்கிங், கதைக்களம், திரைக்கதை உள்ளிட்டவற்றால் தெலுங்கு சினிமாவையே தன் பக்கம் வசிஸ்தா திரும்ப வைத்தார். இதனால் அவர் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

பிம்பிசாரா படத்தில் நந்தமுரி கல்யாண் ராம், சம்யுக்தா மேனன், கேத்ரின் தெரசா, ஸ்ரீனிவாச ரெட்டி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில் பிம்பிசாரா படம் தற்போது ஜி5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகி உள்ளது.

ஓ.டி.டி. தளத்திலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதற்கிடையே பிம்பிசாரா படத்தின் இயக்குனர் மல்லிடி வசிஸ்தா ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கதை சொல்லியதாகவும், அந்த கதை ரஜினிக்கு மிகவும் பிடித்து போனதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்திற்கு ரஜினிகாந்த் ஓகே சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே பிம்பிசாரா அடுத்த பாகம் குறித்த அறிவிப்பை இயக்குனர் வசிஸ்த் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதன்பின்னர் சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில், ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.