சுஷாந்த் சிங் வழக்கில் திருப்பம்...ரியா சக்கரவர்த்தி கைதாக வாய்ப்பு!!

கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையில் நடித்து பிரபலமான இளம் இந்தி நடிகர் சுஷாந்த் சிங் சமீபத்தில் தற்கொலை செய்த சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. வாரிசு நடிகர்கள் ஆதிக்கத்தாலும் தனக்கு வந்த படவாய்ப்புகளை அவர்கள் தடுத்ததாலும் மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து 35-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக சுஷாந்த் சிங் தற்கொலைக்கு அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தி காரணம் என்று சுஷாந்த் சிங் தந்தை பாட்னா போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில், சுஷாந்த் சிங் கிரடிட் கார்டை பயன்படுத்தி ரியா சக்கரவர்த்தி பணம் எடுத்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங் கணக்கில் இருந்து ரூ.15 கோடியை வேறு ஒரு கணக்குக்கு மாற்றி உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து மன ரீதியாக அவருக்கு தொல்லை கொடுத்துள்ளனர் என்றும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

இதையடுத்து ரியா சக்கரவர்த்தி மீது பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்த தனிப்படை மும்பை விரைந்துள்ளது. இதனால் ரியா சக்கரவர்த்தி கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அவர் முன் ஜாமீன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.