நடிகர் விஜய்யின் "லியோ” படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிப்பு


நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தயாராகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தில் அவருக்கு ஜோடியா திரிஷா நடித்துள்ளார். ஆக்ஷன் அதிரடியில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தில் சஞ்சய் தத், மிஸ்கின், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த் என்று பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், அக்.19ம் தேதி வெளியாகவுள்ள லியோ” படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, வரும் 19ம் தேதி அதிகாலை 4 மணி மற்றும் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வருகிற அக்டோபர் 20, 21, 22, 23, 24 ஆகிய தினங்களில் காலை 7 மணி சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், வரும் 19 முதல் 24ம் தேதி வரை ஒரு நாளைக்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட திரையரங்குகளில் ஒருநாளைக்கு அதிகபட்சம் 5 காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும் லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி தயாரிப்பு நிறுவனம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சங்கம் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்த நிலையில், தற்போது சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.