சென்னை: கடந்த 10 மாதங்களுக்கு முன் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட செல்பி படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இணையதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு தனது பேஸ்புக்கில் நம்பிக்கைக்கு நன்றி விஜய் அண்ணா. சத்தியம் செய்தபடி அறிவிப்புக்குப் பிறகுதான் இந்தப் படத்தை வெளியிடுகிறேன். 10 மாதங்களுக்கு முன்பு எடுத்த படம். ஆம் கனவுகள் உண்மையாக வரும் தருணம். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இப்படத்திற்குப் பிறகு, விஜய்யை இயக்குவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்நிலையில், விஜய்யின் 68வது படத்தை இயக்குநர் வெங்கட்பிரபு இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இந்த அறிவிப்பை விஜய் ரசிர்கள் இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இப்படத்தின் மூலம் விஜய்யுடன் வெங்கட்பிரபு முதன்முறையாகவும், அதேசமயம் யுவன்சங்கர்ராஜா இரண்டாவது முறையாகவும் கூட்டணி அமைக்க உள்ளனர். முன்னதாக விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்திற்கு யுவன்சங்கர்ராஜா இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.