மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவு

சென்னை: 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வரும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழு படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் 'மாவீரன்' திரைப்படத்தின் டப்பிங் பணியை சிவகார்த்திகேயன் தொடங்கினார்.

இதையடுத்து இப்படத்தில் விடுப்பட்ட சில காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் இதில் சிவகார்த்திகேயன் பங்கேற்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 'மாவீரன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.