தொலைக்காட்சி தொடரில் நடித்த மூன்று நடிகர் நடிகைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

ஒரே தொலைக்காட்சி தொடரில் நடித்த மூன்று நடிகர் நடிகைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கலிபோர்னியாவில் உள்ள ஏரி ஒன்றி நடிகை நயா ரிவேரா தனது மகனுடன் படகு சவாரி செய்ய சென்றபோது திடீரென மாயமானார் என்றும் அவரது 4 வயது மகன் மட்டும் படகில் இருந்து மீட்கப்பட்டார் என்ற தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் நடிகை நயா ரிவேராவின் உடல் தற்போது ஆறு நாட்களுக்குப் பின் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில் மகனுடன் நயா ரிவேரா தண்ணீரில் நீச்சல் அடித்ததாகவும் மகனை படகில் ஏற்றி விட்டு, தான் படகில் ஏறும்போது தவறி அவர் தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நடிகை நயா ரிவேரா, க்ளீ (Glee) என்ற டிவி தொடரின் மூலம் தான் பிரபலமானார். இதே தொடரில் நடித்த பிரபல நடிகர் கோரி மாண்டீத் என்பவர் ஏழு வருடங்களுக்கு முன் மதுவில் போதை மருந்து கலந்து குடித்ததால் மரணம் அடைந்தார். அதேபோல் இந்த தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்த மார்க் சல்லிங் என்பவர் கடந்த 2018 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் நயா ரிவேராவின் முன்னாள் காதலர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த தொடரில் நடித்துள்ள நயா ரிவேராவும் உயிரிழந்துள்ளார். ஒரே டிவி தொடரில் நடித்த மூவர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.