வனிதா விஜயகுமார் மற்றும் சூரியா தேவி புகார் மீது இன்று விசாரணை

வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர் பால் இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். திருமணமான மறுநாள் முதலே பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வனிதா விஜயகுமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த சூரியா தேவி என்ற பெண் மீது வனிதா விஜயகுமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்

அதுமட்டுமின்றி சூரியா தேவி ஒரு கஞ்சா வியாபாரி என்றும் தன்னுடைய வியாபாரத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே தன் மீது அவதூறான பழியை சுமத்தி வருவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனை அடுத்து தன்னை கஞ்சா வியாபாரி என்று கூறி தனது மனதை புண்படுத்திய வனிதா விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூரியா தேவியும் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இரு தரப்பினர் கொடுத்த புகார் குறித்து வடபழனி போலீசார் இன்று விசாரணை செய்கின்றனர். இதனை அடுத்து வனிதா விஜயகுமார் மற்றும் சூரியா தேவி ஆகிய இருவரும் இன்று வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.