வனிதாவின் மூன்றாவது திருமணம் எளிய முறையில் நடந்தேறியது

நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்து முடிந்துள்ளது.

விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா. சந்திரலேகா படம் மூலம் நடிகர் விஜய் ஜோடியாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பின்னர் அவருக்கு சினிமாத்துறையில் வாய்ப்புகள் வரவில்லை.

முதல் கணவருடன் ஏற்பட்ட குடும்பத்தகராறில் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார். பின்னர் பல குடும்ப பிரச்னைகளால் அடிக்கடி ஊடகங்களில் பேசும் பொருளாக மாறினார்.

அடுத்து நடந்த திருமணமும் இவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. இரண்டாவது கணவரிடம் இருந்தும் பிரிந்துவிட்டார். இவருக்கு நடந்த இரண்டு திருமணங்கள் தோல்வியை தழுவின.

முதல் கணவர் ஆகாஷ் மூலம் ஒரு மகன், மகளும், இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலம் ஒரு மகளும் உள்ளனர். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார்.

இந்நிலையில் இயக்குனர் பீட்டர் பால் என்பவை திருமணம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதற்கு இவர்களின் மகள்களும் ஆதரவு கொடுத்தனர். இதனால் மகிழ்ச்சியோடு திருமண வேலைகளை கவனித்து வந்தார்.

இவர்களது திருமணம் நேற்று வனிதாவின் இல்லத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் எளிமையாக நடந்தது.

கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்த பீட்டர் பால், வனிதாவை முத்தமிட்டு மனைவியாக ஏற்றுக் கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அம்மாவின் திருமணத்தை கண்டு மகள்கள் கண்கலங்கினர்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் வனிதா தனது கையில் பீட்டர் பால் பெயரையும், பீட்டர் பால் தனது கையில் வனிதா பெயரையும் பச்சை குத்திக் கொண்டனர். மேலும் தன் அம்மாவிடம் இருந்து வைர மோதிரங்கள் திருமண பரிசாக கிடைத்துள்ளது. இதை அம்மாவின் நண்பர் பரிசளித்ததாக தெரிவித்துள்ளார் வனிதா.