விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள்


சென்னை: மழைக் காலத்தையொட்டி விஜய்மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச அரிசி, சர்க்கரைபைகள் வழங்கப்பட்டன. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், விழியகம்,குருதியகம், படிப்பகம் போன்றசேவைகளை விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் இயக்கத்தினர் செய்து கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏழை குழந்தைகள் படிப்பதற்கு நிதி உதவிகளை அந்தந்த பகுதிகளில் விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வருகின்றனர். அதேபோன்று, குழந்தைகள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் படிப்பதற்கு முட்டை, பால் திட்டம் என்ற திட்டத்தை ஆரம்பித்து, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அந்தந்த மாவட்டத்தில் 5 இடங்களில், 2 முட்டை, ஒரு டம்ளர் பால், பிரட் பாக்கெட்டுகளை குழந்தைகளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் தவறாமல் வழங்கி கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மழைக் காலத்தையொட்டி, நேற்று தென்சென்னைவடக்கு மாவட்ட தலைவர் தி.நகர்அப்புனு தலைமையில், கண்ணம்மாபேட்டை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் 100 பேருக்கு இலவசமாக தலா 3 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ சர்க்கரை பைகள் வீதம் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், சந்திரகுமார், பாண்டியன் உட்பட பகுதி, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.