அவரை நான் இதுவரை பார்த்தது இல்லை... ஆனால் ரொம்ப வருத்தப்பட்டேன்; விஜய் சேதுபதி உருக்கம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் சமீபத்தில் காலமானதை அடுத்து அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி உருக்கமாக கூறியதாவது:-

நான் முதல் முதலில் கதாநாயகனாக நடித்த திரைப்படம் வெளியானபோது என்னுடன் என்னுடைய அப்பா இல்லையே, அவரை கட்டிப்பிடித்து சந்தோசபட முடியவில்லையே என்று வருத்தப்பட்டேன். அதன் பிறகு நான் ரொம்ப வருத்தப்பட்டது எஸ்பிபி அவர்களின் மரணத்தில் தான்.

ஒருவர் எப்படி எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியும் என்று எஸ்பிபி அவர்களை பார்த்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன். அவரை நான் இதுவரை பார்த்ததுமில்லை பழகியதும் இல்லை. ஆனால் அவருடன் பழகியவர்கள் கூறியதை கேட்டு நான் ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். ஒரு வகையில் அவர்களை பார்க்கும் போது எனக்கு பொறாமையாக இருந்தது.

எஸ்பிபி சார் அவர்களுடன் நெருங்கிப் பழகிய கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுக்கு எஸ்பிபி அவரக்ளை பாராட்ட எந்த அளவுக்கு உரிமை இருக்கின்றதோ அதே அளவுக்கு அவரை நேசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவரான எனக்கும் அவரைப் பாராட்டவும் நேசிக்கவும் உரிமை உள்ளது.

என்னுடைய பாட்டி சிறு வயதில் கூறும் போது நம்முடைய உறவினர்கள் யாராவது இறந்தால் வானத்தில் நிலாவாகவும் நட்சத்திரமாகவும் இருப்பார்கள் என்று கூறுவார். அதேபோல் எஸ்பிபி அவர்கள் வானத்தில் நிலாவாக இருந்து பாட்டு பாடுவார் என்று நம்புகிறேன்

எனக்கு பாட்டு பாட சுத்தமாக பாட வராது, ஆனால் அவர் பாட்டைக் கேட்டால் நான் என்னை அறியாமலேயே பாட ஆரம்பித்து விடுவேன் என்று விஜய் சேதுபதி அந்த நிகழ்ச்சியில் தெரிவித்தார்.