விஜய் இப்போது அரசியலுக்கு வரவேண்டாம்; என்னையும் தடுக்க வேண்டாம்

விஜய் இப்போது அரசியலுக்கு வரவேண்டாம். ஆனால் நான் கட்சி ஆரம்பிப்பதை தடுக்க வேண்டாம். விஜய்யை சுற்றி பொய்யான கூட்டம் உள்ளது என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி: விஜய்யின் உண்மை ரசிகர்களுக்காக, கட்சி ஆரம்பிக்க, இதுவே சரியான தருணம். விஜய் வருவார் என நம்பி, நான் இதை ஆரம்பிக்கவில்லை. 25 ஆண்டுகளாக, விஜய்க்காக சொந்த பணத்தை செலவு செய்து உழைத்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்காகவே கட்சி ஆரம்பித்துள்ளேன்.

மக்கள் மீதுள்ள ஆர்வத்தை, படங்கள் வாயிலாக வெளிப்படுத்தி உள்ளேன். விஜய் விடுத்த அறிக்கையே, 'நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீ சம்பந்தமில்லை எனக் கூறு' என, 10 ஆண்டுகளுக்கு முன், நான் சொல்லிக் கொடுத்தது தான். அப்போது சொன்ன அறிக்கை, இப்போது வருகிறது. இது, நான் எதிர்பார்த்தது தான். விஜய் மக்கள் இயக்கத்தை உருவாக்கியவன், நான். அதை, ஒவ்வொரு கட்டமாக வளர்த்து வந்தவன் நான்.

அவரை இந்த இடத்திற்கு அழைத்து வர பட்டபாடு, எனக்கு தெரியும். இந்த இடைபட்ட காலத்தில், இருவருக்கும் தனிப்பாதை உருவாகி விட்டது. அவரை சுற்றி, சிலர் சூழ்ந்துள்ளனர். ஒரு கூட்டம், எங்களை பிரிக்க, தீயாக வேலை செய்கிறது. நான் இயக்கத்தின் பொறுப்பாளராக, ஆனந்த் என்பவரை நியமித்தேன்.

அவர் தான், விஜயை தவறான வலையில் சிக்க வைக்கிறார். 37 மாவட்டங்களுக்கு, 200 மாவட்ட தலைவர்கள் உள்ளனர். இந்த, 200 மாவட்ட தலைவர்களுக்கும், இயக்கத்திற்கும் சம்பந்தமில்லை. இதில், 150 பேர், 'ஆன்லைனில்' விஷயமறிந்தவர்கள். அவர்களை அழைத்து வந்து, விஜய் உடன் நிற்க வைத்து, போட்டோ எடுக்கின்றனர்.

ஆனந்த், சரவணன், பிரசாந்த் உள்ளிட்ட மூவரை மீறி, ஒரு செய்தி கூட வெளியே வராது. ஒரு பொய்யை, திரும்ப திரும்ப சொல்லும் போது உண்மையாகிறது. விஜயை சுற்றி, 'ஆன்லைன்' அரசியல் நடக்கிறது. அவருக்கு அது புரியவில்லை. இரும்புக் கோட்டைக்குள் சிக்கி இருக்கிறார். டுவிட்டரில் வரும் செய்திகளை, உண்மை என, நம்பி உள்ளார். பொய்யானவர்கள், இயக்கத்தில் உள்ளனர். இது, விஜய்க்கு தெரியவில்லை. அரசியல் ஆசையை, விஜய்க்கு நான் ஊட்டி விடவில்லை.

விஜய், இப்போது அரசியலுக்கு வர வேண்டாம் என்கிறேன். ஆனால், நான் வருகிறேன்; என்னை தடுக்க வேண்டாம். என் மேல், விஜய் நடவடிக்கை எடுத்தால் எடுக்கட்டும். அவர் எடுக்க மாட்டார். அவர் என் பிள்ளை. இவ்வாறு, எஸ்.ஏ.சந்திரசேகர் கூறினார்.