10 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் இணையும் விக்ரம்-ஐஸ்வர்யா ராய்!

விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடித்த 'ராவணன்' திரைப்படம் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இந்தநிலையில் தற்போது 10 ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் இருவரும் இணைந்து 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் நடிக்கின்றனர்.

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்திலும் அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுவையிலும் நடந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

செப்டம்பரில் நடைபெறவுள்ள படப்பிடிப்பில் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யாராய் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன் கேரக்டரிலும் ஐஸ்வர்யா ராய் மந்தாகினி மற்றும் நந்தினி கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

10 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணையும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளது என்பதும் 'ராவணன்' படத்தை இயக்கிய பின்னர் மீண்டும் அதே மணிரத்னம் விக்ரம், ஐஸ்வர்யாராய் நடிக்கும் காட்சிகளை இயக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.