விதிமீறல்கள் நடந்த திரையரங்குகள் உரிமையாளர்கள் மீது வழக்கு

சென்னை: பொங்கல் திருநாளுக்காக துணிவு, வாரிசு திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்களுக்கு 12ம் தேதி முதல் 18ம் தேதி வரை மட்டுமே சிறப்பு காட்சிகள் நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.


ஆனால் திரைப்படங்கள் வெளியான 11ம் தேதி நள்ளிரவு முதல் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. இதனால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் தியேட்டர்களில் நடிகர்களின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அரசு உத்தரவிட்டு இருந்தது.

ஆனால் அரசின் உத்தரவுகள் மீறப்பட்டு, 11ம் தேதி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. கட்அவுட்களுக்கு ஆங்காங்கே பாலாபிஷேகம் செய்யப்பட்டன. திருச்சியிலும் இதுபோன்ற விதிமீறல்கள் நடந்துள்ளது. இது குறித்து கிராம நிர்வாக அதிகாரிகள் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் திருச்சியில் வாரிசு, துணிவு திரையிடப்பட்ட தியேட்டர்களின் உரிமையாளர்கள் 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.