ஆர்யா நடித்த டெடி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா?

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா துறை பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் புதிய திரைப்படங்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் நாடு முழுவதும் ரிலீசுக்கு தயாராக இருந்த பல திரைப்படங்கள் தற்போது ஓடிடியில் ரிலீஸ் ஆகி வருகின்றன. குறிப்பாக தமிழில் ஜோதிகாவின் 'பொன்மகள் வந்தாள்', கீர்த்தி சுரேஷின் 'பெண்குயின்' ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் ஓடிடியில் ரிலீசானது. இதனையடுத்து, யோகிபாபு ஹீரோவாக நடித்த காக்டெயில் உள்பட இன்னும் சில திரைப்படங்களும் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளன.

இந்த நிலையில் ஆர்யா மற்றும் அவரது மனைவி சாயிஷா இணைந்து நடித்த 'டெடி' திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படமும் ஓடிடியில் ரிலீஸ் ஆகப்போவதாக செய்திகள் வெளியாகி வந்தது. ஆனால் இந்த தகவலை 'டெடி' படத்தின் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் அவர்கள் மறுத்துள்ளார்.

ஓடிடி பிளாட்பாரத்தில் நாடு முழுவதும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகிறது என்பது உண்மையே. ஆனால் அதே நேரத்தில் எங்களுடைய 'டெடி' திரைப்படம் திரையரங்குகளில் தான் முதலில் ரிலீஸாகும். கொரோனா நிலைமை சீரானவுடன் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக திரையரங்கில் ரிலீசாகும் முன்னால் ஓடிடியில் 'டெடி' திரைப்படம் ரிலீஸ் ஆகாது என்று இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் உறுதிபடக் கூறியுள்ளார்.