பெண்கள் திருமண வயதை அதிகரிக்கும்போது ஏற்படும் நன்மைகள்

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் வளரிளம் பருவ பெண்களின் அனைத்து விதமான பிரச்சினைகளையும் ஆராய குழு ஒன்றை அமைத்துள்ளது. பெண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்த பட்சமாக 18 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை மறுபரிசீலனை செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் அந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

18 வயதிற்குள்ளேயே பெண்களை திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் நாட்டின் பல பகுதியில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 18 வயதுக்குட்பட்ட பெண்களில் 1.5 மில்லியன் பேருக்கு திருமணம் நடப்பதாக யுனிசெப் கூறுகிறது. திருமணமான பெண்களில் 31 சதவீதம் பேர் 18 வயதிற்குள் குழந்தை பெற்றுவிடுகிறார்கள். இதுபோன்ற காரணங்களால் அந்த இளம் தாய்மார்களின் உடல் நலமும், மன நலமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது.

திருமணமான பெண்களில் 31 சதவீதம் பேர் 18 வயதிற்குள் குழந்தை பெற்றுவிடுகிறார்கள். இதுபோன்ற காரணங்களால் அந்த இளம் தாய்மார்களின் உடல் நலமும், மன நலமும் வெகுவாக பாதிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து ரத்த சோகை போன்றவை உருவாகி அவர்கள் பல்வேறு நோய்களுக்கும் ஆட்பட்டு விடுகிறார்கள். 18 வயதை கடந்த பிறகு திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றெடுக்கும் தாய்மார்களுடன் ஒப்பிடுகையில், அதற்கு முன்னதாகவே கர்ப்பிணி ஆகிறவர்கள் எடை குறைந்தவர்களாகவும், ரத்த சோகைக்கு ஆளாகக்கூடியவர்களாகவும் இருக்கிறார்கள்.

மேலும் அவர்கள் கல்வி, வாழ்க்கைத்தரத்திலும் பின் தங்கியவர்களாகவும் இருக்கிறார்கள். திருமண வயதை அதிகரிக்கும்போது பெண்கள் தங்கள் கல்வி தரத்தை மேம்படுத்த முடியும். அதன்பின், திருமணம் செய்து கொண்டு தாய்மை அடையும்போது தாய்க்கும், சேய்க்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும் என பல்வேறு ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.