பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்களால் ஏற்படும் பாதிப்புகள்

வழக்கமாக பள்ளிகளுக்குச் செல்லும்போது லஞ்ச் பாக்ஸில் உணவு எடுத்துச் செல்வார்கள். பல நகரங்களில் லாக்டெளன் தளர்த்தியிருப்பதால் பல அலுவலகங்கள் இயங்கத் தொடங்கியுள்ளன. அதனால் பெரியவர்கள் லஞ்ச் பாக்ஸில் விருப்பமான உணவை எடுத்துச் சென்றுகொண்டிருப்பீர்கள். கடையில் விதவிதமான லஞ்ச் பாக்ஸ்கள் இருக்கும். அவற்றில் பெரும்பாலும் பிளாஸ்டிக்கால் ஆனவையாகத்தான் இருக்கும். குழந்தைகளும் வண்ணம் வண்ணமாக இருக்கும் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸைத்தான் வாங்கச் சொல்வார்கள். ஆனால், நீங்கள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் வாங்குவதைத் தவிர்க்கும்படி உணவியல் ஆலோசகர்கள் வலியுறுத்துகிறார்கள்.

சுடச் சுட இருக்கும் உணவை அப்படியே லஞ்ச் பாக்ஸில் வைப்போம். அது பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் எனில், உணவில் உள்ள வெப்பத்தில் பாக்ஸின் உள் லேயர் பிளாஸ்டிக்கும் வெப்பமாகி இலகும். அது உணவோடு கலந்துவிட வாய்ப்பிருக்கிறது. அதனால், அந்த உணவைச் சாப்பிடும் குழந்தை அல்லது பெரியவர்களுக்கு வயிற்று தொடர்பான சிக்கல்கள் ஏற்படக்கூடும். ஆனால், இது காலையில் கொடுத்து மாலையில் நடக்கும் ஒருநாள் விஷயம் அல்ல. நீண்ட நாள்கள் நடக்கும்போது நேரிடலாம்.

குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கான லஞ்ச் பாக்ஸ்கள் பிளாஸ்டிக்கை கூடுமானவரைத் தவிருங்கள். அதற்குப் பதில் எவர்சில்வர் போன்ற பாத்திரங்களைக் கொண்ட லஞ்ச் பாக்ஸ்களைத் தேர்ந்தெடுக்கலாம். ஒருவேளை குழந்தைகள் பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்தான் வேண்டும் என அடம்பிடிக்கக்கூடும். குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கித் தரும் குழந்தை வளர்ப்புக்கு பலரும் மாறிக்கொண்டிருக்கிறார்கள். அப்படி, குழந்தை அடம்பிடித்து பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ் கேட்டால், வாங்கிக்கொடுங்கள். ஆனால், அதில் சூடான உணவுகளைக் கொடுத்து அனுப்பாதீர்கள்.

காய்கறி, பழங்களை நறுக்கி சாலட் செய்து கொடுப்பது, பிஸ்கெட் போன்றவற்றைக் கொடுத்து அனுப்ப அந்த பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸைப் பயன்படுத்துங்கள். குழந்தைக்கு பிளாஸ்டிக் பயன்பாட்டில் உள்ள கேடுகளை அவர்களின் மொழிக்கு ஏற்ப சொல்லிக்கொடுங்கள். மாறாக, வலுக்கட்டாயமாக அதை மறுக்காதீர்கள். அப்படி மறுக்கும் விஷயங்கள் மீதுதான் குழந்தைகளுக்கு ஈர்ப்பு அதிமாகும். எனவே, கவனத்துடன் கையாளுங்கள்.