கொரோனா வைரஸ் காரணமாக வீட்டுக்குள்ளே முடங்கி இருப்பது உடல் மற்றும் மனதளவில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். ஊரடங்கு காரணமாக பெரும்பாலான முதியவர்கள் நடைப்பயிற்சி, ஜாக்கிங் உள்ளிட்ட உடற்பயிற்சிகள் செய்வதை தற்காலிகமாக நிறுத்திவிட்டார்கள். தற்போது மீண்டும் பின்பற்ற தொடங்கி இருக்கிறார்கள். உடல் வலி, முழங்கால் வலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். பெரும்பாலான முதியோர்கள் உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் தசைப்பிடிப்பு, காயங்கள் குறித்து கவலைப்படுகிறார்கள்.
நடைப்பயிற்சியின் அடுத்த நிலையான ‘பிரிஸ்க் வாக்கிங்’ எனப்படும் விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ளலாம். இது ஒருவகை தீவிரம் குறைந்த ஏரோபிக் பயிற்சி போன்றது. இது இதயத்துடிப்பை சீராக வைத்துக்கொள்ள உதவும். தசைகளுக்கும் நன்மை பயக்கும். முழங்கால் அல்லது கணுக்கால் பாதிப்புக்கு ஆளானவர்கள் ஜாக்கிங் செல்வதை விட இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம். இது ஜாக்கிங்கை விட சிறந்த உடற்பயிற்சியாகவும் கருதப்படுகிறது. ‘ஸ்டேஷனரி சைக்கிளிங்’ எனப்படும் ஒரே இடத்தில் இருந்து மேற்கொள்ளப்படும் சைக்கிளிங் பயிற்சியை தொடரலாம்.
‘ஸ்குவாட்ஸ்’ எனப்படும் குனிந்து நிமிரும் உடற்பயிற்சியையும் வயதானவர்கள் மேற்கொள்ளலாம். கால் களை தரையில் ஊன்றிக்கொண்டு மூட்டு பகுதிகளை முன்னோக்கி வளைத்துக்கொண்டு அதற்கு நேராக கைகளின் இரு மூட்டுகளையும் மடக்கியபடி குனிந்து நிமிர்ந்து பழைய நிலைக்கு திரும்ப வேண்டும். அதாவது நிற்கும் நிலையில் இருந்து பாதி உட்கார்ந்த நிலைக்கு சென்றுவிட்டு நிமிர வேண்டும். இந்த பயிற்சியை சரியான நிலையில் மேற்கொள்வது முக்கியமானது.கை கால்களை நீட்டியும் மடக்கியும் செய்யும் உடற்பயிற்சிகள் முதுகு தசைகள் மற்றும் தோள்பட்டைகளை பலப்படுத்த உதவும்.
உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு முன்பு வார்ம் அப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியது முக்கியம். அவை உடல் நேரடியாக கடினமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவதை தவிர்த்து இலகுவாக செயல்பட வைக்கும். உடற்பயிற்சிக்கு ஏற்ப அனைத்து தசைகளையும் இலகுவாக்குவதற்கு உதவும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும் அவசியம். தண்ணீரில் உள்ள ஆக்ஸிஜன் உடலில் ஆக்ஸிஜன் அளவை சீராக தக்க வைத்திருப்பதற்கு துணை புரியும். இரவில் ஆழ்ந்து தூங்கவில்லை என்றால் மறுநாள் காலையில் உடற்பயிற்சி செய்வதை தவிர்த்துவிடலாம்.