உடல் பருமனுக்கு தீர்வு எப்படி? இதோ சில யோசனைகள் உங்களுக்காக!!!

சென்னை: ஆண், பெண், குழந்தைகள், இளம் வயதினர், பெரியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், பலரும் உடல் பருமனால் அவதிப்படுகின்றனர். தற்போது உடல் பருமனுக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் அனைத்து வயதினருக்கும் ஆயுர்வேத மருத்துவம் சில மூலிகைகளைப் பரிந்துரைக்கிறது.

வெந்தயம்: வெந்தயத்தில் இருக்கும் ‘கேலக்டோமேனன்’ நீரில் கரையக்கூடியது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தருகிறது. உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது.

வெந்தய விதைகளை வறுத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சிறிது வெந்தயப் பொடியைக் கலந்து குடிக்கலாம் அல்லது இரவில் வெந்தய விதைகள் அரை டீஸ்பூன் அளவு ஊறவைத்து மறுநாள் காலையில் எழுந்ததும், காலை உணவுக்கு முன்பு மென்று சாப்பிடலாம்.

குக்குலு: ஆயுர்வேத மருந்துகளில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படும் மூலிகை குக்குலு. இது உடலின் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுவதன் மூலம் எடை இழப்பை ஊக்குவிக்கும். இயற்கையாகவே கொழுப்பைக் குறைக்கும் மூலிகையான இதைத் தேநீராக்கிக் குடித்து வரலாம்.

விஜய்சர்: விஜய்சர் என்பது வேங்கை மரம் ஆகும். இதன் பட்டை உடல் பருமனைக் கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. குறிப்பாக வயிற்றுப்பகுதியில் இருக்கும் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இந்த மூலிகைப் பட்டையைத் தேநீராக்கிக் குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

திரிபலா: கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் தான்றிக்காய் சேர்த்த கலவையே ‘திரிபலா’ எனப்படுகிறது. உடலில் கலந்திருக்கும் நச்சுகளை நீக்கவும், செரிமான அமைப்பை மேம்படுத்தவும் இவை உதவுகின்றன. இதை இரவு உணவுக்குப் பிறகும், காலை உணவுக்கு அரை மணி நேரத்துக்கு முன்பும், வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.