இலை, பூ, காய், விதை, பட்டை என மருத்துவக்குணங்கள் நிறைந்த பூவரசு

சென்னை: மருத்துவ குணங்கள் பல நிறைந்த பூவரசு பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஏராளமான நன்மைகளும் இதில் உள்ளது.

நூற்றாண்டுகளைக் கடந்து வாழக்கூடிய மரங்களுள் பூவரச மரமும் ஒன்று. கிராமங்களில் பலரது வீடுகளிலும், தோட்டங்களிலும் பூவரச மரம் இன்றும் இருப்பதை நாம் பரவலாக காணலாம். இதன் இலை, பூ, காய், விதை பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை.

பூவுக்கெல்லாம் அரசன் போல் நோய் தீர்க்கும் மாமருந்தாக இருப்பதால்தான் இதனை பூவரசு என்று அழைக்கின்றனர். இதில் கொட்டைப் பூவரசு சாதாரணப் பூவரசு என இருவகைப் படும். விதைகள் இல்லாமல் சப்பையான காய்கள் இருப்பது சாதாரணப் பூவரசு. கொட்டைப் பூவரசு காய்களை உடைத்தால் உள்ளே நிறைய விதைகள் இருக்கும். இதன் இலை, பூ, பழுப்பு, காய், வேர் மற்றும் பட்டை முதலியன மருத்துவப் பயன் கொண்டவை.

பூவரசம் மரத்தில் இதய வடிவ இலைகளின் நடுவே மஞ்சள் வர்ணத்தில் பூத்துக்குலுங்கும் பூவரச மரத்தின் பூக்கள் எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இந்த மலர்கள் உண்பதற்கு உகந்தவை என்று சித்தமருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுவாக இந்த இலைகளை விஷத்தை போக்கும் வல்லமை உடையதால் இதனை பூச்சிக்கடி மற்றும் விஷ வண்டுகடிகளுக்கு மருந்தாக இந்த பூக்களை சித்த மருத்துவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். பூவரசம் பட்டையை பொடித்து சலித்து அதனுடன் சந்தனத் தூள் அல்லது வில்வ கட்டைத் தூள் கலந்து சருமத்தில் மீது பூசிவந்தால் சருமத்தில் உண்டாகும் சொறி, சிரங்கு, கரப்பான் போன்ற தோல் நோய்கள் அகலும்.

பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் இலேசான பசபசப்புடன் மஞ்சள் நிற சாறு வரும். இதை முகத்திலுள்ள கறுப்புப் பகுதிகள், செயின் உராய்வதால் உண்டான கறுத்த பகுதிகளில் தடவினால் கருமை மாறும்.

பூவரசங்காய் (2), செம்பருத்திப்பூ (2), பூவரச பழுத்த இலை (2) இவற்றை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்துவந்தால் பொடுகு நீங்கும். சருமத்தில் தேய்த்து வந்தால் சருமம் பளபளப்பதுடன் கண் கருவளையம் மாறும்.