ஊட்டச்சத்துகள் நிறைந்த... நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவம் கொண்ட கோதுமை

சென்னை: தானிய வகைகளில் ஒன்றான கோதுமை உலகில் மற்றப் பயிர்களின் வணிகங்களைவிட அதிகம் செய்யப்படுவது. பஞ்சாபிகளின் முதன்மை உணவாக இருக்கும். இது நல்லதொரு உணவு மட்டுமல்ல, ஊட்டச்சத்துகள் நிறைந்தது. நோய்களைக் குணப்படுத்தும் மகத்துவம் வாய்ந்தது என்றால் மிகையாகாது.

இன்று மக்களை வாட்டி வதக்கி வரும் முக்கிய பிரச்னை சர்க்கரை நோய்தான். பிறக்கும் குழந்தைகளுக்கும் இது ஏற்படுகிறது. சர்க்கரை நோய் வந்துவிட்டாலே எதையும் சாப்பிட முடியாதே என்பதுதான் மக்களின் பெரும் கவலையாகும்.

இப்பிரச்னைக்குப் பெரும் வரப்பிரசாதமாக உள்ளது கோதுமை. அதிலும் குறிப்பாக சம்பா கோதுமை சர்க்கரையின் அளவைக் கணிசமாகக் குறைப்பதுடன் மொத்தக் கொழுப்புச்சத்து மற்றும் டிரைகிளைசிரைட் (Triglyceride) அளவையும் கணிசமாகக் குறைக்கிறது.

சம்பா கோதுமையில் அதிக நார்ச்சத்தும் உயிர்ச்சத்தும் நிறைந்திருக்கின்றன. முதுகுவலியும், மூட்டுவலியும் பலரைப் பாடாய்ப்படுத்தி வருகிறது. இந்த அவதிக்குள்ளாகிறவர்கள் இதை வறுத்து, பொடியாக்கி அதனுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டால் பலன் கிடைக்கும்.

கோதுமை, உளுந்து, கஸ்தூரி மஞ்சளைப் பொடியாக்கி வெந்நீர்விட்டுக் கலந்து, மூட்டுவலி உள்ள இடங்களில் பூசி வந்தாலும் நிவாரணம் கிடைக்கும்.

உடல் பருமன் என்பது இன்றைக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது. மருந்து, மாத்திரைகளைச் சாப்பிட்டும் பலன் கிடைக்காமல், பலரும் இயற்கை மருத்துவத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கோதுமையும் கைகொடுக்கும். குறிப்பாக, கோதுமை ரவை நல்ல மருந்து. அதிக அளவிலான நார்ச்சத்து, புரதம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது.

குறைந்த கலோரி இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதனால் கோதுமை ரவையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களின் உடல் எடை கணிசமாகக் குறையும். அதேநேரத்தில் உடல் ஆரோக்கியம் மேம்படும். இது, நமது உடலில் மெதுவாக உடைக்கப்பட்டு மெள்ள மெள்ளக் கரைவதால், எடையைக் குறைக்க உதவும்.

அத்துடன் ரத்த சர்க்கரையின் அளவைச் சமநிலையில் வைத்திருக்க பெரிதும் உதவும். கோதுமை ரவையில் கஞ்சி செய்து சாப்பிட்டு வந்தால், புளித்த ஏப்பம் போன்ற பிரச்னைகளுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.