தூதுவளையின் இலை, காய், பூ, பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதில் முக்கிய இடம் தூதுவளைக்கு உள்ளது. இதன் இலை, காய், பூ, பழம் ஆகியவற்றில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

இறைவன் நமக்கு கொடுத்த ஒரு வரப்பிரசாதம் இந்த தூதுவளையாகும். இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணும் ஒரு சிறந்த மூலிகை. இது இந்தியாவில் எல்லா இடங்களிலும் பயிராகும் கற்ப மூலிகைகளில் ஒன்று. இதற்கு தூதுவளை, சிங்கவல்லி அளர்க்கம் என்று பல பெயர்கள் இருக்கின்றன.

இது ஒரு கொடி வகை. சிறு முட்கள் நிறைந்து காணப்படும் இதன் இலை, காய், வேர் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இது ஈரமான இடங்களில் செழித்து வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. சிவப்பு நிறத்தில் பழங்கள் இருக்கும். இதில் உள்ள மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

வாரம் இருமுறை இதன் இலையை எடுத்து ரசம், கசாயம் அல்லது சூப் வைத்து குடித்தால் தீராத சளி, இருமல் அனைத்தையும் விரட்டிவிடும். குடல்நோய், உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறுகளைக் குணப்படுத்தும்.

தூதுவளை உடல்வலிக் கோளாறு, நுரையீரல் கோளாறு ஆகியவற்றை குணப்படுத்தும். தூதுவளை காயை உலர்த்தி தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய்கள், அழற்சி, வாயு தொந்தரவு தீரும். தூதுவளை கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் வாதம் மற்றும் பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்தும்.

இளைப்பு குணமாகி உடல் வலுப்பெறும். நோயெதிர்ப்பு சக்தி கொடுக்கும். ஜீரண சக்தி அதிகரிக்கும். இதன் காயை பச்சையாக சமைத்தோ அல்லது வற்றல், ஊறுகாய் செய்து ஒருமண்டலம் முறைப்படி உண்டு வந்தால் கண்ணில் உண்டான பித்த நீர் அதிகரிப்பு, கண் நோய்நீங்கும்.