வெற்றிலையில் அடங்கியுள்ள மருத்துவக்குணங்களின் மகத்துவம்

வெற்றிலையின் மகத்துவம்... எப்போதுமே நாம் உணவு சாப்பிடும் போது அதனுடன் சேர்த்து சில மருத்துவ குணமிக்க மூலிகைகள் அல்லது மூலிகை பொருட்கள் உட்கொண்டனர். நமது நாட்டின் பாரம்பரியத்தில் எந்த ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இறுதியாக 'வெற்றிலை' சாப்பிடும் பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும்.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச்சத்தும், 0.8% கொழுப்புச்சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயாமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் 'சி' உள்ளது. வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய்
எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் என்னும் பொருள் உள்ளது.

வெற்றிலை உமிழ்நீர் பெருக்கும். நாடி நரம்பை உரமாக்கும். வாய் நாற்றம் போக்கும். வெற்றிலைச்சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச் சாற்றுடன் நீர் கலந்த பாலை தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக்கட்டி வர தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணெயில் தொட்டு, ஆசனவாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுடன் ஐந்து துளசி இலையை வைத்து கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து சிறு குழந்தைகளுக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும். வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத்திணறல் மற்றும் இருமலுக்கு நிவாரணம் கிடைக்கும்.

வயிற்றுக்கோளாறு நீங்க, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப்புண் நீங்கும். அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையைப் போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும், வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொண்டு சொறி, சிரங்கு, படைக்கு தடவி வர குணமாகும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கு வைத்துக்கட்ட நல்ல பலன் தரும்.