புதுவை அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு; முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு

புதுவை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள தாக புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி புதுவை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பயன்பெற முடியும்.

புதுவையில் நீட் தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த 94 பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். அதே நேரத்தில் தனியார் பள்ளிகளில் படித்த 1,346 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 16 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் தனியார் பள்ளிகளில் படித்த 243 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

அரசு பள்ளிகளில் படித்த 2 மாணவர்கள் புதுவை பிராந்தியத்தை சேர்ந்தவர்கள், 3 பேர் காரைக்காலை சேர்ந்தவர்கள், 11 பேர் மாகி பிராந்தியத்தை சேர்ந்தவர்கள். ஏனாம் பிராந்தியத்தில் ஒருவர்கூட தேர்வாகவில்லை. எனவே இந்த ஆண்டே இந்த 10 சதவீத உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.