108 ஆம்புலன்ஸ் சேவையை காலதாமதம் இன்றி பெற வேண்டுமா?

ஆம்புலன்ஸ் சேவை பெறுவது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழகத்தில் 24 மணி நேரமும் 108 அவசரகால ஊர்தி சேவை செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா நோய் தொற்றால் ஏற்பட்டுள்ள கூடுதல் பளுவையும் அவசரகால ஊர்தி சேவை திறம்பட சமாளித்து வருகிறது. இச்சூழலில் 108 ஆம்புலன்ஸ் சேவையை மேலும் செம்மைப்படுத்தவும் பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 108 ஆம்புலன்ஸ் சேவை கட்டுப்பாட்டு அறையில் கூடுதல் அழைப்புகளை கையாள முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் அழைப்பை உடனடியாக ஏற்கும் வண்ணமாக கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கென பிரத்யேகமாக ஒரு கட்டுப்பாட்டு அறையை உருவாக்க முதல்-அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனையடுத்து ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்பட்டுள்ளது. 108 ஆம்புலன்ஸ் வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டுப்பாட்டு அறை, 10 தொலைபேசி இணைப்புகளுடன் 24 மணி நேரமும் செயல்படும்.

சென்னையில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள், 0444006 7108 என்ற எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம் 108 ஆம்புலன்ஸ் சேவையை எவ்வித காலதாமதமும் இன்றி பெறுவதற்கு ஏதுவாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.