தமிழகத்தில் இன்று கொரோனாவால் 109 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத அளவில் இன்று அதிகரித்துள்ளது. இது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. ஆனால், தமிழக அரசின் தடுப்பு நடவடிக்கைகளினால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் இன்று சற்று குறைந்து, 5,609 பேருக்கு பாதிப்பு தென்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்தை கடந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று 109 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலியானோர் எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5,800 பேர் குணமடைந்தனர். இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 2ஆயிரத்து 283 ஆக அதிகரித்துள்ளது.