அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விபரம் வருமாறு:-

அதிமுகவினர் ஒற்றுமையுடன் செயல்பட்டு மீண்டும் ஆட்சியமைக்க பாடுபட வேண்டும். கொரோனா பரவலை குறைத்திருப்பதை ஏற்று மத்திய அரசு, தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க வேண்டும்.

அதிமுக அரசு எந்த மொழிக்கும் எதிரானதல்ல, ஆனால் மொழி திணிப்பை உறுதியாக எதிர்க்கிறோம். இருமொழிக் கொள்கையே அதிமுகவின் கொள்கை. ஏழை மாணவர்களுக்கு எதிராகவும் கல்வி வணிகமயமாக்கப்படுவதை ஊக்குவிக்கும் நீட் தேர்வை கைவிட வேண்டும். ஜிஎஸ்டி மற்றும் பல்வேறு திட்டங்களுக்கான மானியங்களின் நிலுவைத் தொகையை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்.

கலாச்சார ஆய்வுக்குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த அறிஞர்களுக்கு இடமளிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும். கச்சத்தீவு மீட்கப்பட வேண்டும், இலங்கைத் தமிழர் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்த வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்து அதிமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.