இலங்கைக்கு கடத்த இருந்த 1.5 டன் சமையல் மஞ்சள் பறிமுதல்

வேதாளை: இலங்கைக்கு கடத்த இருந்த 1.5 டன் சமையல் மஞ்சளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வந்த 1.5 டன் சமையல் மஞ்சளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மதுரையிலிருந்து சமையல் மஞ்சளை இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனம் மூலம் கொண்டு வந்து கொண்டிருப்பதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் மண்டபம் அடுத்த வேதாளை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் உரிய ஆவணங்கள் இன்றி சமையல் மஞ்சள் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 1.5 டன் சமையல் மஞ்சளை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், இரண்டு நபர்களை கைது செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.