பிரித்தானியாவில் இருந்து 154 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

154 பேர் தாயகம் திரும்பினர்... கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பிரித்தானியாவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 154 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்

விசேட விமானத்தின் மூலம் அவர்கள் இன்று (புதன்கிழமை) இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். இதனையடுத்து விமான நிலையத்தில் அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், பரிசோதனை முடிவுகள் வரும் வரையில் விமான நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள ஹோட்டல்களில் அவர்களை தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளிலும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் கல்வி, வேலை, தொழிற்சார்ந்த பணிகளுக்காக சென்ற இலங்கையர்கள் நாடு திரும்ப இயலாமல் தவித்து வந்தனர்.

இப்படி பல்வேறு நாடுகளில் தவித்து வந்த இலங்கையர்களை அரசாங்கம் சிறப்பு விமானம் வாயிலாக தாயகத்திற்கு அழைத்து வருகிறது. அந்த வகையில் பிரித்தானியாவில் தவித்து வந்த இலங்கையர்கள் தற்போது தாயகம் திரும்பி உள்ளனர்.