மாலைத்தீவில் இருந்து 176 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

தாயகம் திரும்பினர்... கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் தங்கியிருந்த 176 இலங்கையர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு திரும்பியுள்ளனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் ஒன்றின் மூலமே அவர்கள் இன்று நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு விமான நிலையத்தில் வைத்து பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பரிசோதனை முடிவுகள் வரும் வரையில், அவர்கள் அனைவரும் விமான நிலையத்தை அண்மித்துள்ள ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பரிசோதனை முடிவுகள் வெளிவந்ததும் அவர்களை முகாம்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஊரடங்கால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் சிக்கி தவித்த இலங்கை மக்களை மீட்டு அழைத்து வரும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.