எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான 2-ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது

சென்னை: கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது ....தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வியாண்டு மாணவர்சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வு சமீபத்தில் நிறைவடைந்தது.

இதையடுத்து பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனிலும், அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு மற்றும் விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, மாற்றுத் திறனாளி ஆகியவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவும் நடைபெற்றது.

இந்த நிலையில், முதல் சுற்று கலந்தாய்வு முடிவில் காலியாக உள்ள இடங்கள் மற்றும் இடஒதுக்கீடு பெற்றவர்கள் கல்லூரிகளில் சேராததால் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கான 2-ம் சுற்று கலந்தாய்வு ஆன்லைனில் நேற்று தொடங்கியது.இன்று மாலை 5 மணி வரை www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் பதிவு செய்யலாம். வருகிற 24-ம் தேதி காலை 10 மணி முதல் 28-ம் தேதி மாலை 5 மணி வரை இடங்களை தேர்வுசெய்ய வேண்டும்.

அதைத்தொடர்ந்து வருகிற 29, 30-ம் தேதிகளில் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும். 31-ம் தேதி இடஒதுக்கீடு செய்யப்பட்ட விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும். செப்டம்பர் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி மாலை 5 மணி வரை இட ஒதுக்கீட்டு ஆணையை இணையதளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். வருகிற செப்டம்பர் 4-ம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்து உள்ளது.