3 மாணவர்கள் நீரில் மூழ்கி பலி... ஈரோடு அருகே குட்டையில் குளிக்கச் சென்ற 3 மாணவர்கள், உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள வெங்கநாயக்கன் பாளையம் பகுதியில் கல்ராமணி குட்டை இருக்கிறது. மழைக்காலம் தொடங்கவிருந்ததால், கடந்த மாதம் இந்த குட்டை தூர்வாரப்பட்டு ஆழமாக்கப்பட்டது. நேற்று அப்பகுதியில் பெய்த கனமழையால் குட்டையில் மழை நீர் தேங்கியிருந்தது.
இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த மௌலீஸ்வரன் (13), திலீப்குமார் (12) மற்றும் ஜீவானந்தன் (14) ஆகிய 3 சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர்.
சிறுவர்கள் 3 பேரும் ஆழத்திற்கு சென்றதால், மூழ்க ஆரம்பித்துள்ளனர். வெகு
நேரம் ஆகியும் சிறுவர்கள் வெளியே வராததை எண்ணி குழப்பம் அடைந்த வயலில் வேலை
பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள், உடனே அக்கம் பக்கத்தினருக்கு தகவல்
கொடுத்துள்ளனர்.
இதையடுத்து சிலர் குட்டையில் இறங்கி சிறுவர்களை
தேடியுள்ளனர். இதனிடையே குட்டையின் மற்றொரு பக்கத்தில், இரண்டு
சிறுவர்களின் உடல் கரை ஒதுங்கியுள்ளது. இதையடுத்து, 2 மணி நேர
போராட்டத்திற்கு பிறகு மற்றொரு சிறுவனின் உடலையும் தீயணைப்பு வீரர்கள்
மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சிறுவர்களின்
உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இச்சம்பவம்
குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.