சேலத்தில் 34 அம்மா மினி கிளினிக்- முதலமைச்சர் தொடங்கிவைத்தார்

ஏழை-எளிய மக்களை தேடிச்சென்று மருத்துவ சேவை அளிக்கும் வகையில் ‘மினி கிளினிக்’ திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி, கிராமப்புறங்களில் 1,400, பெருநகர சென்னை மாநகராட்சியில் 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் கிளினிக்குகளாக 200 என மொத்தம் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தமிழகத்தில் தொடங்க திட்டமிடப்பட்டன. இதற்கு ‘முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக் திட்டம்’ என்று பெயர்சூட்டப்பட்டது. முதல்கட்டமாக 630 அம்மா மினி கிளினிக்குகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.

சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் உள்ள அம்மா மினி கிளினிக்கை நேற்று முன்தினம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வியாசர்பாடி எம்.பி.எம். தெரு மற்றும் மயிலாப்பூர் கச்சேரி சாலையில் அமைக்கப்பட்டு இருந்த அம்மா மினி கிளினிக்கை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.

இந்நிலையில் இன்று சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே இலத்துவாடி கிராமத்தில் அம்மா மினி கிளினிக்கை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். இலந்துவாடியில் அம்மா கிளினிக் திறப்பால் கவர்ப்பனை, திட்டச்சேரி, கிழக்குராஜபாளையம் மக்கள் பயனடைவர்.

சேலம் மாவட்டத்தில் 100 அம்மா கிளினிக் திறக்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக 34 அம்மா கிளினிக் திறக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதி விவசாயிகள் அனைவருக்கும் மருத்துவ சேவை கிடைக்க தொடங்கப்பட்டதே ‘அம்மா கிளினிக்’ என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.