தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள்; முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110-ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அப்போது, அம்மா நகரும் நியாயவிலை கடை திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடை திட்டம் தொடங்கப்படவுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் தொடங்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) சென்னை தலைமைச் செயலகத்தில் நகரும் நியாயவிலை கடை வாகனத்தை கொடியசைத்து தொடங்கிவைக்க உள்ளார்.

இந்த திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைய உள்ளனர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட உள்ளது.