மும்பையில் 3,520 படுக்கைகளுடன் புதிதாக 5 கொரோனா சிகிச்சை மருத்துவமனைகள் திறப்பு

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டின் மற்ற நகரங்களை விட மும்பை நகரம் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இதுவரை 86 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பாதிப்பு விருது செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று இங்கு புதிதாக 785 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

நகரில் மேலும் 64 பேர் பலியாகியுள்ளதால், மும்பையில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை மும்பையில் 5 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்து உள்ளனர். மும்பையில் இதுவரை 58 ஆயிரத்து 137 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 23 ஆயிரத்து 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும் மும்பையில் குணமடைந்தோர் விகிதம் 67 சதவீதமாக அதிகரித்து உள்ளது. தற்போது, கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்கவில்லை என புகார்கள் எழுந்துள்ளன. இதனால் தற்போது கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முல்லுண்டு, தகிசர் கிழக்கு, தசிசர் மேற்கு, மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் மற்றும் பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் ஆகிய 5 இடங்களில் புதிதாக தற்காலிக ஆஸ்பத்திரிகள் 3 ஆயிரத்து 520 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கொரோனா ஆஸ்பத்திரிகளை நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார். மும்பையில் இதுவரை 15 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் அங்கு இதுவரை 6 ஆயிரத்து 552 கட்டிடங்களும், 750 குடிசைப்பகுதிகளும் கொரோனா பரவலை தடுக்க ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.