விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,237 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நீடித்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 80 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 46 ஆயிரத்து 341 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 154 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 313 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 28 ஆயிரத்து 539 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 187 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 6 ஆயிரத்து 673 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. இதுவரை மாவட்டத்தில் 13 ஆயிரத்து 811 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரு முகாமில் 21 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். வீடுகளில் 71 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,237 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 1,711 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனினும் 6 ஆயிரத்து 673 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. எனவே மருத்துவ பரிசோதனையை தீவிரப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.