போலி ஆவணங்களை பயன்படுத்தி வாங்கிய 56 ஆயிரம் சிம்கார்டுகள் முடக்கம்

சென்னை: 56 ஆயிரம் சிம்கார்டுகள் முடக்கம்... தமிழ்நாட்டில் போலி ஆவணங்களை பயன்படுத்தி வாங்கப்பட்ட 56 ஆயிரம் சிம்கார்டுகள் முடக்கப்பட்டன.

நாடு முழுவதும் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை செல்போன் சிக்னல் மூலம் கண்டறிய நடவடிக்கை எடுத்த போது, பலர் போலி ஆவணங்கள் மூலம் சிம்கார்டுகள் வாங்கி பயன்படுத்தியதை மத்திய தொலை தொடர்பு துறை கண்டுபிடித்தது.

இதையடுத்து முக அமைப்பு கண்டறியும் மென்பொருள் தொழில்நுட்பத்தின் மூலம் தரவுகளை ஆய்வு செய்ததில், தமிழகத்தில் சுமார் 55 ஆயிரத்து 983 சிம்கார்டுகள் போலி ஆவணங்கள் மூலம் வாங்கப்பட்டதை கண்டுபிடித்து அதிகாரிகள் அவற்றை முடக்கினர்.

அந்த சிம்கார்டுகள் எங்கே வாங்கப்பட்டது என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க தொலைத் தொடர்பு துறை பரிந்துரைத்ததன் பேரில், தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார், 8 மாவட்டங்களில் சிம் கார்டு விற்பனை செய்த 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 5 பேரை கைது செய்துள்ளனர்.