குஜராத் மாநிலத்தில் கொரோனா மருத்துவமனையில் தீவிபத்து - 8 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நவ்ரங்பூரா பகுதியில் உள்ள ஷீரா மருத்துவமனையில் கொரோனா பாதிப்புடைய நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் ஷீரா மருத்துவமனையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென தீ கொழுந்து விட்டு எரிந்ததால், தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது. அதன்பின் இதுகுறித்து தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீவிபத்தில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இந்த தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருந்த நோயாளிகளை மீட்டதால், பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. குஜராத் மாநிலத்தில் கொரோனா மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 8 பேர் பரிதாபமாக பலியாகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.