தமிழகத்தில் புதன்கிழமை வரை 8,000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை:விடுமுறை முடிவடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் பயணிகளுக்காக புதன்கிழமை வரை 8,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் ... தமிழகத்தில் ஆயுதப்பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பயணிகள் சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர். இதனால், பயணிகளின் வசதிக்காக தமிழகம் முழுவதும் 15000 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும், சென்னையிலிருந்து மட்டுமே வெளியூர்களுக்கு 8,000 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஆனாலும், பயணிகள் போதுமான பேருந்து கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில், ஆயுதபூஜை விடுமுறை முடிவடைந்து மீண்டும் பணிக்கு திரும்பும் பயணிகளுக்காக புதன்கிழமை வரையிலும் 8000 சிறப்பு பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இது போக, பயணிகளுக்கு கூடுதல் பேருந்துகள் தேவைப்படும் பட்சத்தில் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.