இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக 96.72% இறப்புகள் தவிர்ப்பு

இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு காரணமாக கிட்டத்தட்ட 78,183 (96.72 சதவீதம்) இறப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று கொரோனா வைரஸ் பாதிப்புகளில் இந்தியா அதிகபட்ச ஒருநாள் ஸ்பைக்கைப் பதிவு செய்தது, ஒரே நாளில் 6,654 புதிய நோய்த்தொற்றுகள் பதிவாகி நாட்டின் மொத்த பாதிப்பை 1.25 லட்சமாக உயர்த்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு குறித்த சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள்படி, இந்தியாவில் மொத்தம் 69,597 பாதிப்புகள் செயலில் உள்ளன, இறப்பு எண்ணிக்கை 3,720 ஆகும். இதுவரை 51,783 பேர் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீட்பு வீதம் சனிக்கிழமை 41.39 சதவீதமாக ஆக இருந்தது.

இந்தியாவில் 41,000 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்புகளை கொண்டுள்ள மராட்டிய மாநிலம் தொடர்ந்து மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது. மராட்டியத்திற்கு பிறகு (41,642), தமிழகத்தில் 13,967 பாதிப்புகளும் குஜராத்தில் 12,905 பாதிப்புகளும் உள்ளன. டெல்லியில் 11,659 கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மத்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் படி சோதனை செய்யப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 28,34,798 ஆகும். 24 மணி நேரத்தில் சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 1,15,364 ஆகும்.