தமிழகம் முழுவதும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியது

சென்னை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. இதனை அடுத்து தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது.

இந்த வரலாற்று சிறப்புமிக்க இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மதுரை கீழஅண்ணாதோப்பில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் நேற்று தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர், அந்த பள்ளியில் உள்ள குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.

அதைத்தொடர்ந்து குழந்தைகளுக்கு உணவுகளை ஊட்டிவிட்டு மகிழ்ந்தார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் தொடங்கியது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்த நிலையில், இன்று முதல் வழங்கப்படுகிறது.

மாதவரத்தில் உள்ள சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.