பிளஸ்-2 விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ்-2 தேர்வு எழுதியவர்கள் விடைத்தாள் நகலை இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் சி.உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

பிளஸ்-2 பொதுத்தேர்வு, மறுதேர்வு மற்றும் பிளஸ்-1 அரியர் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்தவர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று 'Notification' பக்கத்தில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்யலாம்.

விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பினால், அதே இணையதள முகவரியில் Application for Retotalling/ Revaluation என்ற தலைப்பை கிளிக் செய்து வெற்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யவேண்டும்.

இந்த விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 2 நகல்கள் எடுத்து, வருகிற 21-ந்தேதி காலை 10 மணி முதல் 25-ந்தேதி மாலை 5 மணிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் ஒப்படைக்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.