பிரான்ஸ் நாட்டு விமானப்படை விமானம் சென்னையில் தரையிறங்கியது

சென்னை: சென்னையில் தரையிறங்கியது... சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிரான்ஸ் நாட்டு ஆர்மி டி எல் ஏர் விமானப்படை விமானம் தரையிறங்கியதால் பரபரப்பு

பிரான்ஸ் நாட்டு விமானப்படை விமானமான ஆர்மி டி எல் ஏர். இது ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 400 எம் அட்லஸ் என்ற வகையைச் சேர்ந்தது. இந்த விமானம் பிரான்ஸ் நாட்டு ராணுவத்திற்காக தயாரிக்கப்பட்டது. மணிக்கு 880 கிலோ மீட்டர் வேகம் செல்லக் கூடிய இந்த விமானம், வானிலே பறந்தபடி வேறொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் ஆற்றல் கொண்டது.

முறையான விமான ஓடுபாதை இல்லாத இடத்தில் கூட இந்த விமானம் தரையிறங்க கூடியது. இந்த விமானத்தில் கனரக ஹெலிகாப்டர், போர் வாகனங்களை எடுத்துச் செல்லலாம். மேலும் பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளிலும் இந்த விமானம் பயன்படுத்த கூடியது.

இந்த பிரான்ஸ் விமானப்படை போா் விமானம் சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி சென்றது. இந்நிலையில் விமானத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டிய தேவை ஏற்பட்டதால் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. அங்கு எரிபொருள் நிரப்பிய பிறகு அந்த விமானம் அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்றது.