தேர்தல் ஒத்தி வைக்க கோரும் மனு மீது விசாரணை எடுத்துக் கொள்ளப்பட உள்ளது

கொழும்பு: உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்குமாறு கோரி ஓய்வுபெற்ற இராணுவ கேணல் ஒருவர் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். இதேவேளை வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த இயலாது என உயர் நீதிமன்றத்தில் அறிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

போதிய நிதி கிடைக்காத காரணத்தினால், தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் உள்ள சிக்கல்களை குறிப்பிடவுள்ளதாக அதன் தலைவர் கூறியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு முன்னதாக அறிவித்திருந்தது.

தபால் வாக்குச்சீட்டுகள் அரச அச்சகத்தில் இருந்து சரியான நேரத்தில் கிடைக்காததால், தபால் மூல வாக்குப்பதிவு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.