புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தை சேர்ந்த 35 வயது வாலிபர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஸ்கூட் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி இருந்துள்ளது.

இதனையடுத்து, அந்த பயணி திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நோய் பாதிப்பு ஒன்றும் இல்லை, அதனால் பயப்பட வேண்டாம் என டாக்டர் ஒருவர் அவருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இதனால் அவர் டிஸ்சார்ஜ் ஆகாமல் சொந்த ஊருக்கு சென்றார்.

இந்நிலையில், ஆஸ்பத்திரியில் அந்த வாலிபர் இல்லாததால் புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அந்த நபரின் முகவரியை வைத்து அதிகாரிகள் நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர்.

அதை அடுத்து அங்கு அவரிடம் பேசி புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் அவரது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.